புதுச்சேரியில் CBSEக்கு மாறும் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம்: முதல்வர் ரங்கசாமி

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

புதுச்சேரியில் சிபிஎஸ்இ-க்கு மாறும் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம்: முதல்வர் ரங்கசாமி


புதுச்சேரியில் CBSEக்கு மாறும் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம்: முதல்வர் ரங்கசாமி


புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் அமலாகும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி தந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் இருந்து அரசாணை பெறப்பட்டு விரைவில் அரசாணை புதுச்சேரியில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதுவை அரசு பள்ளிகளில் 1 முதல் 6ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலும், 11ம் வகுப்பிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகிறது. அடுத்தக் கல்வியாண்டில் 10, 12ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடபுத்தகம் வழங்க அரசு கொள்முதல் செய்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ பாட வகுப்புகளை நடத்தும் வகையில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.



அதேநேரத்தில் தமிழ் விருப்ப பாடமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் ஆசிரியர்களும், மாணவர்களும் தயாராகாத சூழ்நிலையில் ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது கல்வியை பாதிக்கும் என்றும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக விரிவான செய்தி இந்து தமிழ் திசையில் வெளியானது.


இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழை கட்டாயமாக்க வலியுறுத்தி சமூக நல அமைப்புகள் சார்பில் கல்வித் துறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த சமூக அமைப்புகள் முடிவு எடுத்தனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம் தேவை என்று வலியுறுத்தி மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்தனர். அதையடுத்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினர்.


அதேபோல அதிமுக மாநிலச் செயலர் அன்பழகனும் இதேக் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினார். துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித் துறைச்செயலர் ஜவகர் ஆகியோருடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசித்தார்.


அதையடுத்து முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்படும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் இருந்து அரசாணை பெறப்பட்டு விரைவில் அரசாணை வெளியிடப்படும்" என்று உறுதியளித்தார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.