Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Whatsapp 8778711260
இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்தவில்லை. கட்டாயம் வழங்கப்படும் - மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது. கடந்த ஆட்சியில் வழங்காதது உள்ளிட்டவை என மொத்தம் 14 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்திவைக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. ரூ. 10,200 கோடி நிதியில் 2011-16 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு 6.8 மில்லியன் (68 லட்சம்) மாணவர்களுக்கு (கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் சேர்த்து) மடிக்கணினி வழங்க திட்டமிடப்பட்டது. 2019ம் ஆண்டு வரையில் 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று பொது முடக்கநிலை காரணமாக உலகாளவிய உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. இதன், காரணமாக தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழக அரசின் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி கடந்த 3 ஆண்டுகளாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாமல் உள்ளன.
இதற்கிடையே, 2017 -18 முதல் 2019- 20 வரையிலான காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 55 ஆயிரம் மடிக்கணினிகளை தகுதியான மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கவில்லை என்று சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது CAG அறிக்கை குறித்து பேசினார். அதில், “3% மாணவர்கள், தனியார் பள்ளிகள் நோக்கி சென்றுள்ளனர். நான் தனியார் பள்ளிக்கு எதிராக பேசவில்லை, ஆனால் முன்னாள் இருந்த அரசு தேவையில்லாமல் எப்படி செலவு செய்துள்ளது என்று தணிக்கை அறிக்கை சொல்லியுள்ளது.2016 - 21 ஆட்சி காலத்தில் ஒரு அரசு எப்படி செய்யல்படக்கூடாதோ அப்படி செயல்பட்டுள்ளது முன்னாள் அதிமுக அரசு ”என விமர்சித்தார்.
மேலும் பேசியவர் , ‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது. கடந்த ஆட்சியில் வழங்காதது உள்ளிட்டவை என மொத்தம் 14 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.