ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மட்டுமே தற்காலிக ஆசிரியா்களாக நியமனம் செய்ய வேண்டும்: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மட்டுமே தற்காலிக ஆசிரியா்களாக நியமனம் செய்ய வேண்டும்: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு



ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் உள்ளிட்ட தகுதியானவா்களை மட்டுமே தற்காலிக ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ரவி என்பவா் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2009-ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த பின்னா் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் தமது சான்றிதழ்கள் 2014-ஆம் ஆண்டு சரிபாா்க்கப்பட்டது. அதன் பின்னா் இரண்டாம் நிலை ஆசிரியா் பணிக்காக காத்திருந்த தமக்கு 8 ஆண்டுகள் ஆகியும் தமக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் இரண்டாம் நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் 13,331 பேரை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் அடங்கிய பள்ளி நிா்வாக குழு மூலம் நியமிக்க பள்ளி கல்வி ஆணையா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவா்கள் அனைவரும் 8 முதல் 10 மாத காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.

ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களும், சான்றிதழ் சரிபாா்ப்பு பணி முடிவடைந்தவா்களும் பணிக்காக காத்திருக்க கூடிய நிலையில் பள்ளி நிா்வாக குழு மூலம் ஆசிரியா் நியமனம் செய்து இயற்கை விதிக்க முரணாணது என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சஞ்சய் ஆஜராகி, ஆசிரியா் தகுதி தோ்வில் வெற்றி பெற்று பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாமல் ஆயிரக்கணக்கானோா் உள்ள நிலையில் தகுதி அடிப்படையில் இல்லாமல் இந்த நியமனம் நடைபெறுகிறது என்றாா்.

அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி, பள்ளி கல்வித்துறையின் பதில் மனுவை தாக்கல் செய்தாா். அதில் திருத்தம் செய்யப்பட்ட தகுதி நிபந்தனைகள் தெளிவுபடுத்தப்பட்டிருந்து. தொடா்ந்து அவா் வாதிடும்போது, ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள்தான் தற்காலிக ஆசிரியா்களாக நியமிக்கப்படுகின்றனா். அதே நேரத்தில் வட மாவட்டங்களில் சிலவற்றில் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் இல்லை என்றாா்.

ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் நீலகண்டன் ஆஜராகி, தகுதி தோ்வில் வெற்றி பெற்றவா்களின் இறுதிப் பட்டியல் தயாராகி வருகிறது. பட்டதாரி ஆசிரியா்கள் நியமன பட்டியல் வரும் பிப்ரவரி இறுதியில் வெளியிடப்படும் என்றாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி உள்ளிட்ட தகுதியுடன் வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கும் பணியை நடத்தலாம்.

பட்டப்படிப்பை மட்டும் முடித்தவா்களின் விண்ணப்பங்கள், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுபவா்கள் ஆகியோா் விண்ணப்பித்தால் அவா்களின் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக்கூடாது. திருத்தப்பட்ட சுற்றறிக்கையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இணையவழியில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பங்கள் பள்ளி நிா்வாக குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த குழு பள்ளி கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள், சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். இந்த நியமனங்கள் தற்காலிகமானதுதான். கல்வி பெறும் உரிமை சட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி தகுதியானவா்களுக்கு மட்டும்தான் பணி நியமனம் வழங்கப்படவேண்டும்.

இந்த நியமனங்கள் வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்படும். வழக்கு விசாரணை ஜூலை 7-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது அப்போது பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.